Wednesday, August 7, 2013

* கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்த கண்ணீர்!!


கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்த கண்ணீர்!!


 இலங்­கையை  ஆட்சி செய்த கடைசிச் சிங்­கள  மன்­ன­னாக கரு­தப்­படும்  ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்­கனை கொலை­வெ­றி­யுடன் ஆங்­கி­லேயப் படைகள் துரத்தி வரு­கின்­றன. உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு ஓடி­வந்த மன்னன் மகியங்கனை நகரை ஊட­றுத்து அதற்கு அரு­கி­லுள்ள சிறு கிரா­ம­மான பங்­க­ர­க­ம­வுக்குள் நுழை­கின்றான்.
அங்கு விவ­சாய குடும்­பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்­ணொ­ருவர் (பாத்­திமா என அறி­யப்­ப­டு­கின்றாள்) நெல்லை காய­வைத்துக் கொண்­டி­ருந்தார். மன்­னனின் நிலையைக் கண்­டதும் அங்­கி­ருந்த பொந்து போன்ற அமைப்­புள்ள பாரிய மரத்தின் மறைவில் ஒளிந்து கொள்­ளு­மாறு அப்பெண் மன்­ன­னுக்கு சாடை செய்­கிறாள். மன்­னனும் மறைந்து கொள்­கிறான்.

ஆவே­சத்­துடன் அங்கு வந்த ஆங்­கி­லே­யர்கள் மன்­னனைப் பற்றி அவ­ளிடம் வின­வு­கின்­றனர். அவளோ தெரி­யா­தென கூறி­வி­டு­கின்றாள். ஆத்­திரம் மேலிட்ட ஆங்­கி­லேயப் படைகள் அவளை அங்­கேயே பலி­யெ­டுத்து விட்டு சென்­று­வி­டு­கின்­றன.

வெளியில் வந்த மன்னன் உயி­ரி­ழந்து கிடக்கும் பாத்­தி­மாவை பார்த்து ‘மா ரெக லே’ (என்னைக் காத்த இரத்­தமே) என்ற வார்த்­தையை பிதற்­றி­ய­வ­னாக தேம்பித் தேம்பி அழு­கின்றான். சிங்­கள பழங்­க­தை­களில் ‘உயிர்­காத்த உத்­தமி’ என வர்­ணிக்­கப்­பட்ட இப் பெண் செய்த தியா­கத்­திற்கு நன்­றிக்­க­ட­னாக அந்த ஊரையே அப்­பெண்ணின் குடும்­பத்­திற்கு மன்னன் எழுதி வைத்­த­தாக வர­லாறு கூறு­கின்­றது. அதற்­கான உயில் பத்­திரம் 1956 வரை பதுளை கச்­சே­ரியில் இருந்­த­தாக வர­லாற்­றா­சி­ரி­யர்கள் கூறு­கின்­றனர்.

ஆனால், இன்று என்ன நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. உயில் எழுதிக் கொடுக்­கப்­பட்ட பங்­கரகம பிர­தே­சத்­தி­லி­ருந்து சில கிலோ­மீற்றர் தொலைவில் இருக்­கின்ற மஹி­யங்­கனை நகரில் அமைந்­துள்ள சிறிய பள்­ளி­வாசல் அல்­லது தொழுகை நடத்­து­மிடம் நாட்­க­ணக்­காக மூடிக் கிடக்­கின்­றது. எந்தச் ‘சாவியை’ கொண்டும் இதனை திறக்க முடி­யாமல் நாதி­யற்று நிற்­கின்­றது முஸ்லிம் சமூகம்.


முத­லா­வது கல­வரம்

 இலங்­கையின் முத­லா­வது இனக் கல­வரம் 1983 ஜூலைக் கல­வ­ர­மல்ல. 1883 மார்ச் மாதத்தில் கொழும்பில் சிங்­கள – கிறிஸ்­தவ மதக் கல­வரம் ஒன்று இடம்­பெற்­றது. இருப்­பினும் இது ஏனைய பிர­தே­சங்­க­ளுக்கு பர­வ­வில்லை. ஆனால் பாரிய அழி­வு­க­ளுக்கு வித்­திட்ட முத­லா­வது இனக் கல­வரம் சிங்­க­ள­வர்­க­ளுக்கும்  முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் 1915 மே மாதம் இடம்­பெற்­றதே என்­பதை நினை­வு­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது.

கம்­பளைப் பள்­ளி­வாசல்  விவ­கா­ரத்தை ஒட்­டி­ய­தாக கண்டி   காசல் ஹில் பள்ளிச் சூழலில் இக்­க­ல­வரம்  வெடித்­தது. அப்­போ­தி­ருந்த பௌத்த மறு­ம­லர்ச்­சி­வாதி ஒருவர் உள்­ள­டங்­க­லாக சிங்­கள தலை­மைகள் சிலர் வெளி­யிட்ட கருத்துக்­களே  இதற்கு மூல கார­ண­மாக அமைந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. பின்னர்  இக்­க­ல­வரம் கொழும்பு, புத்­தளம் போன்ற பிர­தேசங்­க­ளுக்கும் பர­வி­யது.

இதன்­போது, 4075 கொள்ளைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றா­கவும், சுமார் 350 கடைகள் எரிக்­கப்­பட்­ட­தா­கவும் 86 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும்,  17 பள்­ளி­வா­சல்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­தா­கவும், 20 இற்கு மேற்பட்டோர் கொலை செய்­யப்­பட்­ட­துடன் 180 இற்கும் அதி­க­மானோர் காயங்­க­ளுக்கு உள்­ளா­ன­தா­கவும் வர­லாற்று ஆய்­வா­ளர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். அதற்குப் பிறகு 1939 இல் சிறி­ய­ள­வான சிங்­கள – தமிழ் கல­வ­ரமும் 1983 இல் கறுப்பு ஜூலைக் கல­வ­ரமும் நிகழ்ந்­தே­றின.

இச்­சம்­ப­வங்­களை நன்­றாக கவ­னிக்க வேண்டும். இலங்­கையின் முத­லா­வது  இனக் கல­வ­ரமே பள்­ளி­வா­சலை   மைய­மாகக் கொண்­டுதான் ஏற்­பட்­டுள்­ளது. அதுவே   மேற்­சொன்ன   துர­திர்ஷ்­ட­வ­ச­மான அழி­வு­க­ளுக்கும் இட்டுச் சென்றது.

இந்த வர­லாற்று உண்­மையில் இருந்து பாடம் படிக்­காமல், சிறு­பான்மை  மக்­களின்  குறிப்­பாக மத ரீதி­யாக மிகுந்த  உணர்வு மேலீடு   உள்­ள­வர்­க­ளான முஸ்­லிம்­களின் அடை­யா­ளங்­களை இலக்கு வைத்து போரா­டு­வதன் பார­தூ­ரத்­தையும் பள்­ளி­வா­சல்­களை அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கு­வதில் உறைந்­தி­ருக்­கின்ற அநீ­தி­யி­ழைப்­பையும் கணக்­கெ­டுக்­காமல் சிங்­கள கடும்­போக்கு சக்­திகள் நடந்து கொள்­வது ஏனென்­றுதான் புரி­யு­தில்லை.

பள்­ளிக்குப் பூட்டு

மஹி­யங்­க­னையில் முன்னர் பள்­ளி­வாசல் என்று அழைக்­கப்­பட்­டதும், பின்னர் சிறிய தொழு­மிடம் என வரை­யறை செய்­யப்­பட்­ட­து­மான ஒரு மதஸ்­த­லத்தின் உள்ளே பன்­றியின் இரத்தம் வீசப்­பட்டு, அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டு கடைசியில் மூடப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான சம்­ப­வங்­களை  கோர்த்துப் பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு, ஏதோ­வொரு  நோக்­கத்­திற்­காக  எல்­லாமே நன்­றாக திட்­ட­மிட்டு  செய்­யப்­பட்­டி­ருப்­பதை  அறிந்து கொள்ள அவ்­வ­ளவு நேர­மெ­டுக்­காது.

பெரும்­பான்­மை­யாக சிங்­க­ள­வர்­களை குடி­யி­ருப்­பா­ளர்­க­ளாக கொண்ட மஹி­யங்­கனை நக­ர­மா­னது  மகா ஓயா – கண்­டிக்கு இடை­யி­லான ஏ26 நெடுஞ்­சா­லையில் அமைந்­தி­ருக்­கின்­றது. ஏ26 நெடுஞ்­சா­லையில் கிழக்கு மாகாணத்திற்கும் மத்­திய மாகா­ணத்­திற்கும்  இடை­யி­லுள்ள ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்த  ஒரு பிர­தே­ச­மாக இது உள்­ளது.  மத்­திய  மலை­நாட்டில் மேல்­நோக்கி பய­ணிப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்ட 17 ஊசி வளை­வு­களின் (பெண்ட்) கார­ண­மா­கவே  இந்­ந­கரம்  பிர­பல்­ய­மா­னது  என்றே கூற­வேண்டும்.

இங்கே நீண்­ட­கா­ல­மாக இருந்த ஒரு வழி­பாட்­டி­டம்தான் இப்­போது மூடு­விழா கண்­டுள்­ளது. இந்த இடம் தொடர்பில் இருக்கும் மாற்­றுக்­க­ருத்­துக்­களும் விளக்­க­மின்­மை­களும் நாளுக்­குநாள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. நம்­ப­க­மான தக­வல்­களின் பிர­காரம், இது வக்பு சபையில் பதி­வு­செய்­யப்­பட்ட ஒரு உத்­தி­யோ­க­பூர்வ பள்­ளி­வாசல் அல்ல என்றே தெரி­கின்­றது. ஆன­போதும், தொழு­வ­தற்­காக பல ஆண்­டு­க­ளாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஒரு இடம் என்­பதை மறுதலிக்க இய­லாது.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள வேடுவ பழங்­கு­டி­யி­னரின் தலை­வ­ரான ஊரு­வ­டுகே வன்­னி­யத்­தோவின் வார்த்­தை­களில் பல நிதர்­ச­னங்கள் மறைந்­துள்­ளதை குறிப்­பிட்­டாக வேண்டும். ‘தான் அறிந்த காலத்தில் இருந்து முஸ்­லிம்­களின்  பள்­ளி­வாசல்  ஒன்று  பங்­க­ர­கம்­மன  பிர­தே­சத்தில்  அமைந்­துள்­ளது. இலங்­கையில்  வாழும் 23 ஜாதி­களும்   தங்­க­ளுக்கு விரும்­பிய   மதத்தைப்   பின்­பற்­று­வ­தற்கு உரி­மை­யு­டை­ய­வர்கள்.

எனவே, முஸ்­லிம்­களும் அப்பள்­ளி­வா­ச­லி­லேயே        மத­வ­ழி­பாட்டை மேற்­கொள்­ளலாம். அதற்கு மேல­தி­க­மாக, மூன்று முக்­கிய பௌத்த ஸ்தலங்­க­ளுக்கு  நடுவில் நகரில்  ஒரு பள்­ளி­வாசல் தேவை­யில்லை’ என்ற அர்த்­தப்­பட அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இவ­ரது கருத்­தின்­படி, மஹி­யங்­கனை பெரும்­பா­கத்­திற்கு அருகில் பள்­ளி­வாசல் ஒன்று நீண்­ட­கா­ல­மாக பங்­க­ர­கம்­ம­னவில் இருந்­துள்­ளது. அப்­ப­டி­யானால்  முஸ்­லிம்­களும்   வாழ்ந்து இருக்­கின்­றார்கள் என்­பது உறு­தி­யா­கின்­றது. ஆனால், யாரும் எந்த மதத்­தையும் பின்­பற்­றலாம் என்ற கருத்தில் உடன்­ப­டு­கின்ற இனங்­களின் தொன்­மை­ய­றிந்த வேடுவ தலை­வ­ருக்கு, மூன்று பௌத்த தலங்­க­ளுக்கு நடுவே – ஒதுக்­குப்­பு­ற­மா­க­வேனும் முஸ்­லிம்­க­ளுக்­கான ஒரு வழிபாட்டிடம்  இருந்­து­விட்டுப் போகட்­டுமே என்ற நல்­லெண்ணம் ஏன் வர­வில்லை என்­பது அள­வு­க­டந்த ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரி­யது.

அப்­ப­டி­யாயின் இவர்­க­ளது ‘மதங்­களை பின்­பற்றும் உரிமை என்­பது’ 3 இற்கு 1 என்ற விகி­தத்­திலும் சிறு­பான்­மை­யி­னரின் அடை­யாளம் ஒன்று இருப்­பதை உறு­திப்­ப­டுத்த திரா­ணி­யற்­ற­தா­கவே உள்­ளது.

சந்­திக்க முயற்­சிகள்

 மஹி­யங்­கனை விவ­காரம் புனித நோன்பு காலத்தில்  முடுக்­கி­வி­டப்­பட்­ட­தாலோ என்­னவோ, முஸ்லிம் தலை­மை­க­ளுக்கு    சற்று சூடும் சுர­ணையும் சமூ­கப்­பற்றும் அதி­க­ரித்­தி­ருந்­ததை காண முடிந்­தது. அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக ஒலித்த குரல்கள், ஒரு­மித்த குர­லாக ஒலிக்க தலைப்­பட்­டன. ஏனென்றால், முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மீதோ அல்­லது இன்­ன­பிற சமய அடை­யா­ளங்­களின் மீதோ இன­வா­தி­களும், கடும்­போக்கு சிங்­கள அமைப்­புக்­களும் குறி­வைப்­பது இது முதற்­த­ட­வை­யல்ல. கடைசித் தடவை என்­ப­தற்­கான உத்­த­ர­வா­தமும் இல்லை.

எனவே, சில முக்­கிய அமைச்­சர்கள் அரச தலை­மை­யிடம் நிலை­மையை எடுத்துக் கூறினர். இது அர­சுக்கு அப­கீர்த்­தியைக் கொண்­டு­வரும் என்­று­ரைத்­தனர். இதனை திறப்­ப­தற்கு உத்­த­ர­விட வேண்­டு­மென கேட்டுக் கொண்­டனர். சில திருப்­தி­யுறா பதில்­க­ளுடன் சந்­திப்­புக்கள் முடி­வுற்­றன.

இவ்­வா­றான ஒரு சந்­திப்பில் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளிடம் ஜனா­தி­பதி குறிப்­பிட்ட கருத்­துக்கள் மிகுந்த அவ­தா­னத்­திற்­கு­ரி­யன. அதா­வது “இந்தச் சின்ன சின்ன விட­யங்­களை எல்லாம் ஏன் பெரி­து­ப­டுத்­து­கின்­றீர்கள்? முஸ்­லிம்கள் சிங்களவர்கள் விட­யத்தில் செய்யும் தவ­று­களை சிங்­க­ள­வர்கள் தூக்கிப் பிடிப்­பதோ பெரி­து­ப­டுத்­து­வதோ கிடை­யாது” என்று அவர் குறிப்­பிட்டார்.

சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கு முஸ்லிம் ஒருவர் செக்ஸ் படம் காண்­பித்த விவ­கா­ரத்தை பெரி­து­ப­டுத்­தாமல் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்­ததை உதா­ர­ண­மாக அவர் எடுத்­தி­யம்­பி­யுள்ளார்.

ஜனா­தி­பதி குறிப்­பிட்ட உதா­ரணம் போல நிறைய உதா­ர­ணங்கள் இருக்­கின்­றன என்­பதை முஸ்­லிம்கள் கவ­னத்திற் கொண்டு செயற்­பட வேண்டும். சிங்­களப் பெண் பிள்­ளை­களை காத­லித்து விட்டு கம்­பி­நீட்­டுதல், வீட்­டுக்கு தெரி­யாமல் கூட்டிக் கொண்டு நடத்­துதல், கடை­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளிடம் தவ­றாக நடக்க முற்­ப­டுதல், சிங்­க­ள­வர்­க­ளுக்கு போதைப் பொருட்­களை விற்­பனை செய்தல்… என நிறைய சம்­ப­வங்கள் இன்­றைக்கு இல்­லா­விட்­டாலும் நாளை ஒருநாள், பாரிய பிரச்­சினை ஒன்­றுக்­கான கார­ணி­யாக விளக்கம் தரப்­ப­டலாம். என­வேதான் பிற இனத்­த­வ­ருக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தென்றால் முதலில் தங்­களை சுத்­த­மா­ன­வர்­க­ளாக பேணிக் கொள்ள வேண்டும்.

சந்­திக்க நேர­மில்லை

மேற்­சொன்ன பதில்­களில் முஸ்லிம் மக்கள் திருப்தி கொள்­ள­வில்லை. அவர்கள் தமது தலை­மை­க­ளுக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர். இந்தப் பின்­ன­ணியில் 18 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­று­சேர்ந்து ஜனா­தி­பதியைச் சந்­தித்து இது விட­ய­மாக பேசு­வது என்று முடிவு செய்­தனர். ஆயினும் இக்­கூட்­டத்­திற்கே 15 பேர்தான் வந்­தி­ருந்­தனர்.

எப்­ப­டியோ ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தென முடிவு எடுத்­தாலும் அது தொடர்­பாக மேல் மட்­டத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டாலும் அதற்­கான நேரம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. சந்­திப்பு ஒன்­றுக்கு நேரம் ஒதுக்­கித்­த­ரு­மாறு கேட்­ப­தற்கு அரசவரைமுறை ஒன்று இருக்­கின்­றது. முஸ்லிம் தலை­மைகள் அந்த அடிப்­ப­டை­யி­லேயே சந்­திப்­புக்­கான நேரத்தை கேட்­டி­ருப்­பார்கள் என்று நம்­பலாம். இருந்­த­போதும் கூட்­டாகப் போய் பேசு­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை.

இது தேர்தல் காலம். ஊவா மாகா­ணத்தில் தேர்தல் நடை­பெ­ற­வில்லை என்­றாலும்  சிங்­கள மக்­களின் வாக்­குகள் மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணத்தில் அர­சுக்கு தேவை­யாக இருக்­கின்­றது. இதனை வைத்துப் பார்க்­கின்­ற­போது முஸ்­லிம்கள் தரப்பில் நியாயம் இருப்­ப­தாக அரச தலைமை உணர்ந்­தி­ருந்­தாலும் அதனை வெளிப்­ப­டுத்தி முஸ்­லிம்­க­ளுக்கு சார்­பாக செயற்­பட்டால் சிங்­கள கடும்­போக்­கு­வாத சக்­திகள் அர­சுக்கு எதி­ராக மக்­களை திருப்­பி­வி­டு­வார்கள் என்ற அபா­ய­நேர்வு சாத்­தி­யத்தை அவர் அறிந்­தி­ருப்பார்.

என­வேதான், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பை மேற்­கொள்­வதில் இருந்து அவர் தவிர்ந்து கொண்டார் என்று கூறு­வதே பொருத்­த­மாக இருக்கும். ஆனால், ஒரே­யொரு கடிதம் கள நிலை­மை­களை தலை கீழாக புரட்டி விட்­டி­ருக்­கின்­றது.

கடி­தத்தின் கதை

மஹி­யங்­கனை பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யாளர் சபைத் தலைவர் ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை எழு­தி­ய­தாக அரச ஊட­கத்தில் செய்தி வெளி­யா­னது. அந்தக் கடி­தத்தில், அங்கு ஒரு பள்­ளி­வா­சலே இருக்­க­வில்லை. அவ்­வா­றான ஒன்றை அமைக்க நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அது ரண்­முத்து கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் இயங்­கி­வரும் எனது நகைக் கடைக்கு உரி­யது. எனது குடும்­பத்­தினர் மத அனுட்­டா­னங்­க­ளுக்­காக இதனை பயன்­ப­டுத்­தி­ய­போதும் (பொது­வான) பள்­ளி­யாக இயங்­க­வில்லை எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இக்­க­டி­தத்தின் உண்­மைத்­தன்மை பற்றி சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பு­கின்­றனர். ஆனால், ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதா­கப்­பட்­டது – நம்­பிக்­கை­யாளர் சபைத் தலைவர் தனது மனச்­சாட்­சி­யு­டனோ அல்­லது அதனை ஒரு­புறம் ஒதுக்கி வைத்­து­விட்டோ அக் கடி­தத்தை எழுதிக் கொடுத்­தி­ருக்க சாத்­தி­ய­முள்­ளது என்­ப­தாகும். அதேபோல், உயர்­மட்ட அழுத்­தங்­க­ளுக்கு தலைவர் மட்டும் விதி­வி­லக்­காக இருக்க வேண்­டு­மென எதிர்­பார்க்­கவும் முடி­யாது.

ஆனா­லொன்று, தலை­வரின் கடி­தமும் அதில் குறிப்­பிட்ட விட­யங்­களும் உண்­மை­யாயின் தனது சொந்தக் கடையில் பன்றி இறைச்சி வீசிய விட­யத்தை ஏன் சமூகப் பிரச்­சி­னை­யாக காட்ட வேண்டும்? கோரிக்­கை­களை முன்­வைக்க வேண்டும்? என ஏகப்­பட்ட கேள்­விகள் ஏகத்­துக்கு மேலெ­ழு­கின்­றன.

இந்த இடத்தில் ஒரு பதி­வு­செய்­யப்­பட்ட பள்­ளி­வாசல் இருக்­க­வில்லை என்­றாலும், தொழுகை நடத்­து­மிடம் இருந்­தி­ருக்­கின்­றது என்­ப­தற்கு தர்க்­க­வியல் ரீதி­யாக சிறி­ய­தொரு விட­யத்தை முன்­வைக்­கலாம். அதா­வது, பன்றி இறைச்சி, இரத்தம் வீசப்­பட்­ட­மையும் அங்கு தொழுகை நடத்­தா­த­வாறு மூடப்­பட வேண்­டு­மென அழுத்தம் கொடுத்­ததில் இருந்­துமே தெரிந்து கொள்­ளலாம் – அங்கு முஸ்­லிம்­களின் ஏதா­வ­தொரு வழி­பாட்­டிடம் இயங்­கி­யுள்­ளது என்­பதை. தவிர, நகைக்­க­டைக்கு பன்றி இறைச்சி வீசும் அள­வுக்கு இன­வா­திகள் ஒன்றும் முட்­டாள்­க­ளல்ல.

திரா­ணி­யற்ற சமூகம்

புற்­று­நோய்க்கு ஆரம்­பத்தில் மருந்து கட்­டு­வ­துதான் நல்­லது. நாட்­பட்ட புற்­று­நோயை தீர்த்து வைக்க முடி­யாது. இன­வா­தமும் புற்­று­நோய்தான். ஒரு புள்­ளியில் ஆரம்­பித்து மெல்ல மெல்ல முழு நிலப்­ப­ரப்­பையும் சம்­ஹாரம் செய்­கின்­றது. நாம் கண்ட யுத்­தமே இதற்கு அத்­தாட்­சிதான்.

அப்­படிப் பார்த்தால், தம்­புள்­ளையில் பள்­ளி­வாசல் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்ட போது முஸ்லிம் தலை­மை­களும், அறி­ஞர்­களும், சட்­டத்­த­ர­ணி­களும், படித்­த­வர்­களும் தங்கள் தங்கள் பணியை சட்­டத்­திற்கு உட்­பட்டு நேர்­மை­யாக செய்­தி­ருந்தால், நிலைமை இவ்­வ­ளவு மோச­மாகி இருக்­காது. மஹி­யங்­க­னை­யி­லுள்ள முஸ்­லிம்­களின் கண்ணீர் இந்த நோன்பு காலத்தில் கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்­தி­ருக்­காது.

ஆனால், குட்­டக்­குட்ட குனி­தலை ‘பொறுமை காத்தல்’ என்று பெயர் வைத்­தி­ருக்­கின்ற அர­சியல் தலை­மை­களும் சமூக அமைப்­புக்­களும் சிங்­கள கடும்­போக்கு சக்­தி­களை தெளி­வு­ப­டுத்­தவோ, சாமான்ய சிங்­கள மக்­களை அறி­வூட்டவோ இல்லை. தங்­க­ளது ‘மீட்­பர்கள்’ அர­சி­யல்­வா­தி­களே. அவர்­களே எல்­லா­வற்­றையும் செய்ய வேண்­டு­மென முஸ்லிம் மக்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அது நடந்­தி­ருக்கும் – மக்கள் கடந்த தேர்­தல்­களில் மீட்­பர்­களை சரி­யாக தெரிவு செய்­தி­ருந்தால்.

முஸ்லிம் தலை­மைகள் தேர்தல் காலத்­திலும், திரு­மண வீடு­க­ளி­லும்தான் ஒன்­றாக கூட்டுச் சேர்­கின்­றார்கள். மக்­க­ளுக்­காக ஒரு­மித்து குரல் கொடுப்­பது ராஜ­து­ரோகம் என அவர்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் போல. மக்கள் பிர­தி­நி­திகள் தண்­ணீ­ருக்கு ஒன்றும் தவிட்­டுக்கு ஒன்றும் இழுத்துக் கொண்­டி­ருப்­பதால் அச்­ச­மூகம் இன்னும் தொடக்கப் புள்­ளி­யி­லேயே நிற்­கின்­றது.

அண்­மையில் மகி­யங்­கனை பள்­ளி­வாசல் பிரச்­சினை தொடர்பில் அமைச்­சர்கள் சிலர் ரக­சி­ய­மாக பேச்சு நடத்திக் கொண்­டி­ருந்­தனர். இன்னும் சிலர் அடக்கி வாசித்துக் கொண்­டி­ருந்­தனர். ஒருவர் பாரா­ளு­மன்­றத்தில் முழங்கிக் கொண்­டி­ருந்தார். இன்­னு­மொ­ருவர் அதே பாரா­ளு­மன்­றத்தில் ‘மட்­டக்­கு­ளி­யிலும், வெள்­ள­வத்­தை­யிலும் பெண்கள் நடந்து போவது கண்­கொள்ளாக் காட்சி’ என்று வர்­ணித்துக் கொண்­டி­ருந்தார்.

அதேபோல், இச்­ச­மூ­கத்­தி­லுள்ள அறி­ஞர்­களும் சட்­டத்­த­ர­ணி­களும் வைத்­தி­யர்­களும் படித்­த­வர்­களும், பொன்­னா­டைக்­காக அலையும் கூட்­டமும் என்ன செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்?

பத்­தி­ரி­கையில் வரும் செய்­தியைப் படிப்­பது, ஒரு தேநீர் கடையில் குந்தி கதைப்­பது, வீட்­டுக்குச் சென்றால் ‘மானாட மயி­லாட’, ‘அசத்­தப்­போ­வது யாரு’ என செய்­மதித் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களின் தாலாட்டில் தூங்­கிப்­போ­வது. யார் ஏற்றுக் கொண்­டாலும் ஏற்றுக் கொள்­ளா­விட்­டாலும் இதுதான் முஸ்லிம் சமூ­கத்தின் உட்­புற யதார்த்தம்.

இனியென்ன, அடுத்த பிரச்சினை வரும் வரைக்கும்…

அரசியல்வாதிகள் தேர்தலில் லயித்திருப்பார்கள்,

முஸ்­லிம்கள் நோன்புப் பெருநாள் ஆடைக் கொள்வனவில் திளைத்திருப்பார்கள்.

இது விளம்பர இடைவேளை!

No comments:

Post a Comment