Thursday, August 15, 2013

* அன்று தொப்பிக்காக போராடிய சமுதாயம், இன்று பள்ளிகளையே விட்டுக் கொடுக்கின்றது.


அன்று தொப்பிக்காக போராடிய சமுதாயம், இன்று பள்ளிகளையே விட்டுக் கொடுக்கின்றது.



நாங்கள் வெளிநாட்டவர்கள் அல்ல, நாங்கள் அரபு நாட்டு இறக்குமதிகள் அல்ல, நாங்கள் இந்திய வம்சா வழியினர் அல்ல. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், இலங்கை நாட்டின் புத்திரர்கள், இலங்கை எங்கள் தாய் நாடு. இதில் இலங்கை முஸ்லிம்கள் யாருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

ஆம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.

முஸ்லிம்களின் பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றது, வியாபார தாபனங்கள் தாக்கப்படுகின்றன, முஸ்லிம் பெண்களின் ஆடைகள் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.

மொத்தத்தில் முஸ்லிம்களின் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டு, எதிர்கால இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது.

இப்படியான கால கட்டத்தில் நமது சமுதாயத் தலைவர்களின் கையாளாகாத் தனம் மற்றும் அரசியல் தலைமைகளின் சுய இலாப மோகம் போன்றவை முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் மீண்டும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்குள் தம்புள்ளை பள்ளிப் பிரச்சினையில் ஆரம்பித்து கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளி வரைக்கும் இது வரை 24 பள்ளிவாயல்கள் காவிக் காடையர்களினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவற்றில் ஒன்றுக்குக் கூட எவ்விதமான நிரந்தரத் தீர்வுகளும் எட்டப்படவில்லை.

போராடிப் பெற்ற உரிமைகளை போகிற போக்கில் தாரைவார்க்கும் முஸ்லிம் தலைமைகள்.

பள்ளிகளை அமைப்பதும், அதில் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினால் முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும். இந்த உரிமைகளை பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.

ஆனால் இன்றைய இலங்கை இஸ்லாமிய முஸ்லிம் தலைவர்களோ உரிமைகளை பாதுகாப்பதற்குப் பதில் தாராளத் தன்மையுடன் விட்டுக் கொடுக்கும் வேலையை லாவகமாக கையாள்கின்றார்கள்.

அறிஞர் அஸீஸின் துருக்கித் தொப்பி போராட்டம்.

1905.05.02 ல் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு ஒரு வழக்கில் ஆஜரானார். அப்போது அவர் அந்த வழக்கில் வாதாடுவதை நீதியரசர் லயட் எதிர்த்தார். அப்போது தான் தொப்பி அணிந்து வாதாடுவது எனது உரிமை நான் அதனை கழற்ற முடியாது என மறுத்தார் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள். இதன் போது ஏற்பட்ட பிரச்சினையில் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் நீதி மன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இந்தச் செய்தி அக்கால முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த அறிஞர் அஸீஸ் அவர்களுக்கு எட்டியது. உடனே அஸீஸ் அவர்கள் அன்றைய முஸ்லிம் முக்கியஸ்தர்களை அழைத்து1905.10.27 ல் தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமை முஸ்லிம்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமாக்குவதற்காக வேண்டிப் போராடும் விதமாக துருக்கித் தொப்பி போராட்டக் குழு என்ற பெயரில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடும் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.

போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாட்டு முஸ்லிம்களுக்கு விளக்கும் விதமாக நாட்டின் முக்கிய 30 நகரங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அன்றைய கால முஸ்லிம்களின் பிரபல பத்திரிக்கைகளான முஸ்லிம் நேசன், முஸ்லிம் பாதுகாவலன், இஸ்லாம் மித்திரன் போன்றவை இந்த மாநாட்டிற்காக பலத்த விளம்பரங்களை செய்தன. நாடு முழுவதும் மக்களை விழிப்புணர்வூட்டிய அறிஞர் அஸீஸ் அவர்கள் 1905.12.31 ல் மருதானையில் 30 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி துருக்குத் தொப்பி உரிமை மீட்பு மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

போராட்டத்தின் வெற்றி துருக்கித் தொப்பி சட்டமாக்கப்பட்டது.

துருக்கித் தொப்பிக்கான அறிஞர் அஸீஸ் தலைமையிலான போராட்டத்தின் விளைவாக முஸ்லிம் சட்டத்தரனிகள் நீதி மன்றத்தில் தொப்பி அணிந்து கொண்டு வழக்கில் வாதாட முடியும் என்ற சட்டம் ஆங்கிலேய அரசினால் சட்டமாக்கப்பட்டது.

மார்க்கத்தில் இல்லாத மார்க்கம் சொல்லாத தொப்பி என்ற ஆடையை ஆங்கிலேய அரசு தடை செய்தது என்பதற்காக உரிமையை எவரும் பறிக்க முனையக் கூடாது என்பதை ஆங்கிலேய அரசுக்கு அறிவிக்கும் முகமாக அறிஞர் அஸீஸ் அவர்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள் 1905 காலப் பகுதியில்.

மார்க்கம் காட்டித் தராத தொப்பிக்காகவே இவ்வளவு பெரிய போராட்டம் என்றால் மார்க்கத்தின் அச்சாணியாக இஸ்லாத்தின் கேந்திர நிலையமாக இருக்கும் பள்ளிகளுக்காக நாம் எந்தளவுக்கு போராட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தொப்பிக்காக போராடிய சமுதாயம் பள்ளியை விட்டுக்கொடுக்கலாமா?

அன்று சாதாரண தொப்பி விஷயத்திற்காக நமது தலைவர்கள் போராடினார்கள். ஆனால் இன்றைய நமது அரசியல், ஆன்மீகத் தலைமைகளோ நமது உயிர் நாடியான பள்ளிகளையே தாரை வார்ப்பதில் தாராளத் தன்மையை பேணுகின்றார்கள்.

இதுவரைக்கும் சுமார் 24 பள்ளிவாயல்கள் இலங்கையில் தாக்கப்பட்டுள்ளன. சில பள்ளிவாயல்கள் மூடுவிழா கொண்டாடிவிட்டன. சில பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பள்ளிகள் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கின்றன.

இப்படி நாளுக்கு நாள் முஸ்லிம்களின் வணக்கத்தளங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது நமது தலைமைகள் தலையணை வைத்து நிம்மதியாக தூங்குவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உயிரைப் பணயம் வைத்துப் போராடினாலும் இறுதியில் தலைமைகளின் உறுதியின்மையினால் பள்ளிகள் தாரைவார்க்கப்படுகின்றதை நினைக்கும் போது கவலை தாங்க முடியவில்லை.

அன்று – தலையில் இருக்கும் சாதாரண தொப்பிக்காகவே போராடிய முஸ்லிம் சமுதாயம். இன்று – தலையை பணிக்கும் பள்ளிகளையே விட்டுக் கொடுக்கும் அவல நிலையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

தலைவர்களின் சுய இலாபமும், தலைமைத்துவ மோகமும், பதவி ஆசையும் தான் இன்றைய முஸ்லிம் உம்மாவின் வீழ்ச்சிப் பாதைக்கு வழி செய்துள்ளது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

புறப்படத் தயாராவோம்.

இது நமது தாய் நாடு.

இங்குதான் நாம் பிறந்தோம்.

இங்குதான் நமது முன்னோர்களும் பிறந்தார்கள்.

இங்குதான் நாம் இறப்போம்.

இங்குதான் நமது முன்னோர்களும் இறந்தார்கள்.

இந்த பூமியை விட்டும் வெளியே செல்ல நாம் ஒன்றும் பிற நாட்டவர்கள் அல்லர்.

இந்த நாட்டின் மைந்தர்கள்.

இனியும் விட்டுக் கொடுக்க இயலாது.

இனியும் மௌனம் காக்க முடியாது.

இனியும் கை கட்டி வேடிக்கை பார்க்க கூடாது.

புறப்படுவோம் போராட்க் களத்தை நோக்கி.

வெற்றி நம் பக்கம் விரைந்து வரும்.

வேடிக்கை பார்ப்பவர்கள் ஓரம் போய் விடுங்கள்.

வீரர்களையும் சோரம் போக வைக்காதீர்கள்.

புறப்படத் தயாராவோம்.

ஜனநாயக வழியில், சுதந்திர வேட்கையில், வெற்றி கோஷத்துடன், கொடியேந்துவோம் வாருங்கள்.

நமது பள்ளிகளை நாமே பாதுகாப்போம்.

அரசியல் சாக்கடைகளும் வேண்டாம். ஆன்மீக பச்சோந்திகளும் வேண்டாம்.

இறைவனின் ஆலயத்தை மீட்டெடுக்க இறைவனுக்காக அர்பணம் செய்யத் துணிந்த இளைஞர்களே!

திரண்டு வாருங்கள்! தீர்வு நமது கையில் துணையாக ஏகன் அல்லாஹ் இருக்கின்றான்.

இன்ஷா அல்லாஹ

No comments:

Post a Comment