Saturday, July 20, 2013

* அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா..?


அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா..?

மகியங்கனைப் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ள துன்பியல் நிகழ்வானது ஒரு இனத்தின் மத உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதானகேயின் வேண்டுகோளையடுத்து பயத்தின் காரணமாக இன்று 19-07-2013 மகியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு மாகாண சபை அமைச்சரால் ஒரு பள்ளிவாசல் மூடப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்பது இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இச்செயற்பாட்டை வெறுமென கைகட்டி முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேடிக்கை பார்க்கப்போகின்றார்களா? 

முஸ்லிம் அமைச்சர்களால் இப்பள்ளிவாசலைத் திறக்க முடியாதா? இப்பள்ளிவாசலில் அச்சமின்றி இப்புனித ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட பாதுகாப்பு வழங்க முடியாதா? யாருக்காக நீங்கள் பதவி வகிக்கிறீர்கள்? உங்களது சுகபோக வாழ்கையை அனுபவிப்பதற்காகவா அல்லது மக்களின் பறிபோகும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா??

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை வீணே வம்புக்கு இழுக்கும் சமகால நடவடிவக்கைகள் போன்று முன்னொருபோதும் இந்நாட்டில் ஏற்பட்டதில்லை. முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளும் எதிர்ப்பு நடவடிக்கைளும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகவே உள்ளன. 

இந்நடவடிக்கைளை இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இராஜதந்திர ரீதியில் தடுக்க ஏன் முன்வரக் கூடாது? உங்களை பாராளுமன்றதுக்கு அனுப்பி பட்டம் பதவிகளைப் பெறவைத்த மக்கள் வேதனைகளை வயிற்றில் சுமந்து கொண்டு வாழும்போது நீங்கள் வெறும் அறிக்கை விடும் மன்னர்களாக இருப்பதேன்..?

ஆளும் மற்றும் எதிர்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் . நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் என்ன செய்யப் போகிறீர்கள்..??

அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா? அல்லது இந்த சமூகம் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைக்கு தீர்வு காணப் போகிறீர்ளா? அல்லாஹ்காகவும் இந்த முஸ்லிம் சமூகத்தின எதிர்கால சந்திக்காகவுவும் மேற்கூறிய நபர்பளில் ஒருவராவது உங்களது ஒன்றுக்கும் உதவாத பதவியைத் துறப்பீர்களா..? அல்லது நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நாட்டின் அரசியல் சாசனத்தை மீறக் கூடிய, ஒரு இனத்தின் மத உரிமையை பறிக்கக் கூடிய திட்டமிட்ட, ஒருங்கிணைந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் இச்சமூகத்துக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்..? எதைச் செய்யப் போகிறீர்கள்..?

தேசத்துக்கும் சர்வதேசத்தும் இத்தகைய கீழ்தரமான நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் மதக் கடமைகளை எவ்வித அச்சமுமின்றி, எவ்வித இடையுறுகளுமின்றி மேற்கொள்ள குறைந்த பட்சம் எல்லோரும் ஒன்றினைந்தாவது தங்களது எதிர்ப்பைப் காட்ட முன்வருவீர்களா? மறுமையை அஞ்சுகள். மரணம் உங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள், கப்ரின் வேதனையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் மரணிக்கும்போது எதையும் கொண்டு செல்வதில்லை என்பதை சற்று உணருங்கள் உங்களிடம் ஒப்படைக்கபட்டுள்ள அமானிதப் பதவியைக் கொண்டு இச்சமூகதுக்காக எதைச் செய்திருக்கிறீர்கள்.?

சமூகம் உரிமையை இழந்து மதக் கடமைளை நிறைவேற்ற முடியாது தவிக்கும் ஒரு காலத்தில் நீங்கள் உங்களுக்குள் அரசியல் தலைமைத்துவப் போட்டிகளுக்காக சமூகத்தை கறிவேப்பிலைகளாக மாற்றிக்கொண்டிருக்கீறீர்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும் அதை மறந்து விடாதீர்கள். பறிபோகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பீர்களா? காலமும் இந்த சமூகமும் காத்துக்கிடக்கிறது உங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக....!


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment