Tuesday, May 6, 2014

* கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிஸ் பிரிவு அமைத்தால் என்ன..?



கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிஸ் பிரிவு அமைத்தால் என்ன..?

மத நல்லிணக்கப் பொலிஸ் பிரிவை அமைத்திருப்பது மிகவும் விந்தையானது. விசித்திரமானது. வேடிக்கையானது. நகைச்சுவையானது. இது இந்த நாட்டில் மதசுதந்திரம் இல்லையென்பதற்கான மாபெரும் அத்தாட்சி. நீதி சிதறிக்கிடக்கின்றது. அநீதி தழைத்தோங்கி இருக்கின்றது. சத்தியம் செத்துக்கிடக்கின்றது. அராஜகம் மேலோங்கியுள்ளது. மதவெறி கொடிகட்டிப் பறக்கின்றது. பலசேனாக்களின் பேயாட்டம் தொடர்கின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் சமரசக் குழுவின் ( Lessons Learnt & Reconcilliation committee) புத்திமதிகளுக்கு இன்னும் அரசு செவிசாய்க்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில் மதநல்லிணக்கப் பொலிஸ்பிரிவு எதற்கு? பலசேனை ஒரு தொடர்கதை என்பதாலா ? ஒவ்வொருவகை பிரச்சினைக்கும் ஒவ்வொரு தொகை பொலிஸ்படையா?

பௌத்தமத ஆட்சியே இலங்கை முழுவதும் நடக்கவேண்டும் என்று பலசேனாக்கள் அடம்பிடிக்கும் இந்நாட்டில் எதற்கு ஒரு மதநல்லிணக்க பொலிஸ் எனக்கேட்கிறேன். கிழக்கில் ஒரு ஆட்சி, வடக்கில் ஒரு ஆட்சி நடக்கின்றது என்று அடங்கப்படாரி பொதுபலசேனா கூறுகின்றது. கொல்லன் தெருவில் ஊசி விற்க முடியுமா ? வடக்கில் தமிழ் கலாச்சாரமும் கிழக்கில் முஸ்லிம் கலாச்சாரமும்தான் கடைப்பிடிக்கப்படும்.

சிங்கள மக்கள் தொழில் தேடும் நாடுகளும்-ஐ.நா சபையில் மனிதஉரிமை மீறலுக்கு ஆதரவுக்கு ஆள்தேடும் நாடுகளும் முஸ்லிம் நாடுகள்தான். இந்த பொலிஸ் பிரிவு இருக்கின்ற பகையை வளர்த்து விடுமே தவிர பட வைக்காது.
மேலத்தேய நாடுகள் இலங்கை மீதான சர்வதேச விசாரணை ( International Probe) ஒன்றுக்கு கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கின்றது. முன்னா் தமிழ் இனத்தின் ஒருபகுதி அழிப்பு(இன அழிப்பு ) எனக் கூறியது. தற்சமயம் ஐ.நாவில் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பு ஆடைஅவிழ்ப்பு எனக் கூவுகின்றது. அடுத்து முன்வைக்கப்போவது மதசுதந்திரமின்மை என்ற முக்குற்றச்சாட்டையாகும்.
அமைதிக்குப் பெயா்தான் சாந்தி. எமது மதமும் சாந்தி மார்க்கம்.. அது இன்று தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எட்டாக் கனியாகி விட்டது. தமிழர்களை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. முஸ்லிம்களைச்சுற்றி பலசேனாக்களும் பொலிசாரும். சத்தியம் துாங்கிக் கொண்டிருக்கின்றது. அசத்தியம் மேலோங்கிக் கொண்டிருக்கின்றது. சாந்தி குழி தோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மதநல்லிணக்க பொலிஸ் என்றீர்களே ! இதில் உண்மையில் முறைப்பாடு செய்ய வேண்டியது யார் ? முஸ்லிம்கள். ஆனால் முதல் முறைப்பாடு செய்திருப்பது யார் ? சிங்கள ராவய. விடயம் என்னவெனில் பொலிஸ் பாதுகாப்புடன் பல சேனாக்களை இயங்கவிடப் போகின்றீர்கள். இந்தப் பொலிஸ்பிரிவு பல சேனைகளைப் பாதுகாத்து முஸ்லிம்களை வேட்டையாடவே என்பதே எனது கருத்து.

உயிரியல் முறை பீடைக்கட்டுப்பாட்டில் தென்னை மரங்களிலுள்ள வண்டுகளை அழிக்க இன்னொரு வகை உயிரினம் கொண்டுவரப்பட்டது. அத்தென்னை மரவண்டுகள் ஒழிந்த பின்பு அப்பீடைகொல்லிஉயிரினம் வேறு உயிரினங்களை அழிக்கத் துவங்கியது. அழிந்த இனம்தான் தமிழினம். இப்போது அழிக்க நினைப்பது நம்மினம். தமிழீழ விடுதலைப் புலிகளை புதைத்திருக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை விதைத்திருக்கிறார்கள். அடித்துச்சொல்கிறேன். தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேராதவரை தமிழீழம் மலரப்போவதில்லை.

பொலிஸ் பிரிவின் உதவிகொண்டு பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளை தடை செய்தல். முஸ்லிம்களைக் கைது செய்தல். புதிய பள்ளிவாயல்களைக் கட்டவிடாது தடுத்தல். நிலச்சுவீகரிப்பு. கொள்ளையடிப்பு. இருக்கின்ற பள்ளிவாயல்களை உடைத்தல். இவை போன்றவற்றை செவ்வன நிறைவேற்ற பொலிஸாரைத் தேடிஅலையத் தேவையில்லை என்பதே இதன் சாரம்சம். நாட்டில் சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கும்போது எதற்கு இந்த பொலிஸ் பிரிவு.? அவசரகாலசட்டத்தைப் ( Emergency Regulation)முஸ்லிம்களுக்கு பிறப்பிக்கவா ?

எமது ஜனாதிபதி மஹிந்த சால்வை போடுவதில் மட்டுமல்ல காலத்துக்கேற்ற கோலம் போடுவதிலும் கில்லாடி. மதநல்லிணக்கப் பொலிசார் ஒரு போதும் சமன்பாட்டை சரிசெய்ய மாட்டார்கள். குரைக்கின்ற நாய் கடிக்காது என்பது பழமொழி. இப்பழமொழி இன்றைய கலியுக்கதுக்குப் பொருந்தாது. ஏனென்றால் பொதுப்பலசேனா குரைக்கும் கடிக்கும். நாயொன்று நம்மை பார்த்து விடாமல் குரைக்கின்றது என்றால். அதற்கு ஒவ்வொரு முறையும் கல்லெறிய முடியாது. முதலில் பொதுப்பல சேனாவை ஊடகங்கள்தான்( MEDIA) ஒடுக்க வேண்டும். அடக்கவேண்டும்.

நல்லிணக்க பொலிஸ் குழு மதவிவகார அமைச்சின் கீழ் இயங்கினால் என்ன.! அரசமரத்தின் கீழ் இயங்கினால் என்ன ! உங்களுக்குத்தான் சாதகம். உங்களுக்குத்தான் பொன்னாடை போர்த்தும். எங்களுக்குப் பழஞ்சேலைதான்.
பௌத்தமத வணக்கஸ்தலங்களை அமைக்க அனுமதி எதனையும் பெறவேண்டியதில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். முஸ்லிம்கள் இதற்கு அனுமதி பெற முடியாது என்பதே இதன் கருப்பொருள்.
இப்பொலிசில் உள்வாங்கப்படும் முஸ்லிம் பொலிஸார் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று கைகட்டி வாய் பொத்தி மௌனியாக இருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை. பேசாமடந்தைகளைத் தானே பாராளுமன்றம் பார்த்து வர அனுப்பியிருக்கின்றோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக அரச உயர்அதிகாரிகள் -அமைச்சர்கள் பொலிஸ்திணைக்களம் போன்றவற்றை உசுப்பிவிட போகின்றீர்கள். இவைகள் நேர்மையின்றி பக்கச்சார்பாகவே இயங்கும். இதற்குத் தீர்வாக முஸ்லிம்களின் மீது திணிக்கப்படும் மதவெறி, பொருளாதாரத்தடை, மனிதஉரிமை மீறல் போன்றவற்றை சுவிட்சலாந்து ஜெனிவா மனித உரிமை மையத்திலும் ஐ.நா. முற்றத்திலும் முஸ்லிம் அமைச்சர்கள் ஒலிபெருக்க வேண்டும். எதிரொலிக்கச் செய்ய வேண்டும். இது உங்களின் கட்டாயக் கடமை. இதற்கு நிச்சயம் இந்தக்கட்டாக் காலிகள் பயப்படும். அடுத்த ஜெனிவா ஆழிப் பேரலையாக அமைய வேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் மேவின் சில்வாக்களாக மாற வேண்டும். ஒரு மேவின் சில்வாவது இல்லையென்ற கவலை எங்களை ஆட்கொண்டுள்ளது.

இறுதியாக இந்த ”விஷேட மத அமைதிகார் பொலிஸ்பிரிவு” அமைதிகாக்குமா? அல்லது அநீதியைக் கூட்டுமா ? முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறையை ஓங்கி ஒலிக்கச்செய்யுமா?

உத்தம ஜனாதிபதி அவர்களே !!!!!

இத்தோடு முஸ்லிம்கள் அடித்து நொறுக்கப் படுவதைபார்த்து ரசிக்க ”கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஒரு பொலிஸ் பிரிவு” ஒன்றையும் உருவாக்கினால் உதவியாகவும் நன்றாகவும் இருக்கும்
.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment