Friday, January 2, 2015

* அரசியல் கட்சிகள் என்பது நமது மதமுமல்ல, அரசியல் தலைவர்கள் எமது இமாம்களுமல்ல..!


அரசியல் கட்சிகள் என்பது நமது மதமுமல்ல, அரசியல் தலைவர்கள் எமது இமாம்களுமல்ல..!

பேரன்புமிக்க இஸ்லாமியச் சகோதரர்களே! 

நிகழ்கால அரசியல் தொடர்பாக மேலும் சில வார்த்தைகள் உங்களுடன் பேச வேண்டும் போல் தோன்றுகின்றது.

ஓராபி பஷா அறிஞர் சித்திலெப்பை, ராசீக் பரீட், பதியுத்தீன் மஹ்மூத், அஷ்ஃரப், என்போர் நமது சமூகப் பாதுகாவலர்களாக இருந்து காரியம் பார்த்து வந்திருக்கின்றார்கள், என்பதனை அனைவரும் ஒருமித்த குரலில் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இன்று எமக்காகப் பேசுவதற்கு எவருமில்லை. என்றாலும் முஸ்லிம் சமூகத்தின் பேரால் அல்லது அந்த சமூகத்தின் வாக்கு வங்கியைக் காட்டி அரசியல் வியாபாரம் செய்கின்ற வர்களுக்கு மட்டும் எந்தக் குறைகளுமில்லை.

எனவே இன்று இந்த நாட்டிலுள்ள முஸ்லிகள் நடாற்றில் கைவிடப்பட்டிருக்கின்றார்கள். அண்மையில் நடந்த மு.கா. அரசியல் உயர் பீடத்தில் நாம் இங்கு குந்தி இருந்து என்னதான் தீர்மானம் போட்டாலும் முஸ்லிம்கள் ஏற்கெனவே தீர்மானம் எடுத்து விட்டார்கள் என்று உயர் பீடத்தில் பேசி இருக்கின்றார்கள்.

எனவே முஸ்லிம்கள் தீர்மானம் எடுத்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் சமூகத்தின் பேரால் தீர்மானம் போடுவதற்கோ கோரிக்கை விடுப்பதற்கோ உங்களுக்கு உரிமை இல்லை என்பதும் மு.கா.வுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

எனவே நீங்கள் உங்கள் கொடுக்கல் வாங்கல்களை வேண்டுமானால் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு சமூகக் கோரிக்கை என்று மட்டும் முத்திரி பதித்து விடாதீர்கள் என்று நாம் அவர்களிடத்தில் கேடடுக் கொள்கின்றோம்.

என்னதான் தீர்மானமாக இருந்தாலும் மு.கா. மூன்று கூறுகளாக இந்தத் தேர்தலில் பிளவுபட இருக்கின்றது. எனவே இதிலிந்து அந்தக் கட்சியில் உள்ளவர்கள் தனி நபர் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பக் காரியம் பார்க்கின்றார்கள் என்பதனை முஸ்லிம்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

வன்னியைத் தளமாக கொண்டு அரசியல் செய்கின்ற ரிஷாட் அணியும் ஏற்கெனவே தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப காரியம் பார்க்கத் துவங்கி விட்டது. அக்கரையார் மட்டும் ஆயுல் பூராவும் பெரியவருக்கு விசுவாசமாக உறுதி மொழி கொடுத்திருக்கின்றார். இது ஒருவகையில் ஜீரணித்துக் கொள்ள முடியும்.

அடுத்து தேசிய பட்டியலுக்காக துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தவர் கிள்ளி எடுக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்திற்கு சற்று நிம்மதி தருகின்ற செய்தி. பாராளுமன்றத்திலும் சற்று அமைதி நிலவும். பௌசிக்கு வருகின்ற தேர்தலில் தேசியப் பட்டியலுக்குப் பச்சைக் கொடி என்று கேள்வி. நல்ல பாதுகாப்பான ஏற்பாடு!

அஷ்ரஃப் காலத்திலேயே கிள்ளாடி விளையாட்டுப் பண்ணிய காத்தனார் காட்டில் நல்ல மழை என்றும் கேள்வி. மனிதன் பிழைக்கத் தெரிந்தவர். அவர் தொழிலில் நல்ல அறுவடை.

எது எப்படியோ ஒரு சமயம் ஜே.ஆர் சொன்னது போல் அவர் அவர் பாதுகாப்பை அவர் அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ற கூற்றுப்படி இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை இன்று.

ஒரு வகையில் சமூகம் தமது தலைமைகளைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு தமாகவே தீர்மானம் எடுத்திருப்பது நல்லது என்றும் எண்ண தோன்றுகின்றது.

இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் என்பது நமது மதமுமல்ல அரசியல் தலைவர்கள் நமது இமாம்களுமல்ல என்பதனை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் நன்றாகத் தெளிவு படுத்தி இருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்று கின்றது.

எனவே நமது தலைவர்கள் சமூகம் உரிமைகள் என்று ஒப்பாரிவைக்க வரும்போதும் அவர்களுக்கு நல்ல பாடங்களைக் கற்றக் கொடுக்க முஸ்லிம்கள் இப்போதே தம்மைத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

No comments:

Post a Comment